3

கண் தானம்



உன்னை பற்றிய எனது கவிதைகள்,
எத்தனை காலம் வாழும், என்று...
எனக்குத் தெரியவில்லை! பெண்ணே...

ஆனால்...
உன் கண்கள் பேசும்,
கவிதைகள் யாவும்,
பல நூறு காலங்கள்...
வாழ வேண்டும்!

ஆகையால்...
உந்தன் கண்களை,
தானம் செய்!
2

எது அழகு?



விதவிதமாய் உடை அணிந்து,
"அழகாய் இருக்கிறதா?", என்கிறாய்.
"அழகாய் இருக்கிறது!", என்று
பொய் சொல்லவும் சொல்கிறாய்...

எத்தனை முறை தான்,
உன்னிடம் நான் சொல்வது,
"உடுத்தும் உடையை விட
நீ மிக அழகு", என்று...

மனம் முழு நிலவாய்...



நீ...
இமை மூடும் போதெல்லாம்,
என் மனதில் ஏனோ,
இருள் சூழ்ந்து கொள்கிறது...

உன் பார்வையால்...
பிழைத்துக் கொண்டிருக்கும்,
என் மனதைக் கொல்லாதே...

சில காலம்...
சில்லறைச் சிரிப்போடு,
எந்தன் மனம்,
முழு நிலவாய், மிளிரட்டும்!
2

கனவுகளைக் கடனாய் கொடு...



உன் கனவை எல்லாம்,
எனக்கு கடனாய் கொடுத்துவிடு...

உந்தன் அனைத்துக் கனவுகளிலும்,
எந்தன் அன்பை கொண்டு...
என்னையே நிரப்பித் தருகிறேன்,
அது காதலின் நினைவுகளாகட்டும்!
7

கருவறைக் காதல்


இடர் கொண்டு ஈன்றாலும்,
இன்பம் என்றே எண்ணினாய்!

பசித்தாலும் புசிக்காமல்,
எந்தன் பசியாற்றினாய்!

துன்பங்களை மறைத்துவிட்டு,
இன்பத்தை மட்டுமே,
பகிர்ந்து கொண்டாய்!

அவ்வப்பொழுது அரவணைத்து,
மனதில் தேக்கி வைத்த,
அன்பையும் பொழிந்தாய்!

உனக்குள் கருவுற்ற என்னை,
உடலும் உயிரும் தந்து,
தனியனாய்... ஏன்,
பிரித்து வைத்தாய்?
5

அழகாக இருக்கிறாய்...



உடைகள்
உன்னை விழுங்கிய பிறகும்
அழகாக இருக்கிறாய் பெண்ணே...

காரணம்?

நீ அழகா?
உந்தன் உடை அழகா?
உடை உடுத்தும் விதம் அழகா?
2

அழகாக...



ஒரு நாள்,
கடற்கரை ஓரம்,
வந்து செல்லாமல்,
நின்ற அலையாய்,
நானும் அவளும்...
பார்வையால் மட்டும்,
காதல் செய்துகொண்டிருந்த நேரத்தில்,
"எது அழகு?" என்றாள்.

சிறு புன்னகையோடு,
"அழகு என்னும் வார்த்தைக்கு,
அர்த்தம் எதுவும் இல்லையடி...
மனதிற்கு பிடித்ததெல்லாம்,
அழகு என்றானதடி...", என்றேன்.

மீண்டும்...
"உங்களுக்கு எது அழகு?",
என்றாள்.

"அழகே என்னிடம்,
'எது அழகு?',
எனக் கேட்டால்,
பதில் ஏதும்,
சொல்லத் தோன்றுமோ?",
என்றேன் அழகாக...

படர்ந்தன வெட்கங்கள்,
மீண்டும் அழகாக...

மீட்க முடியாத அதிசயம்



"எந்தன் நிழலில் உந்தன் உருவம்",
அழகான கவிதை என்றேன்...

"இதென்ன அதிசயம்?", என்றாய்...

"அடி பெண்ணே!
விண்ணில் உரைந்த,
மழைக் குவிலும்...
அதிசயம் இல்லை!
மண்ணில் புதையுண்டு,
மறைந்துள்ள மனமும்...
அதிசயம் இல்லை!
என்னோடு...
நீ இருக்கும்,
மீட்க முடியாத,
ஒவ்வொரு தருணமும்...",
அதிசயம் என்றேன்.
0

என்ன செய்யப் போகிறாய்?



விழிகளுக்குள் மறைத்து வைத்த,
கருங் காந்தம் கொண்டு,
எந்தன் கண்களை எப்போதும்,
இடைவிடாது ஈர்த்துக் கொண்டிருக்கிறாய்...

ஈர்க்கப்பட்ட விழிகளைக் கொண்டு,
உந்தன் கண்களைத் தவிர,
எதையும் காண இயலாது,
மந்திரமும் செய்து விட்டாய்...

இன்னும்...
என்ன செய்யப் போகிறாய்?
0

தலைவன் வருவான்...


கயற் பிம்பங் கண்டு,
சிறகு விரித்ததோ கொக்கு?
கூந்தல் வாடையால் மயங்கி
நர்த்தனம் ஆடியதோ காற்று?
படர்ந்து கிடக்கும் கார் கூந்தலை
மழை மூட்டம் என்றெண்ணி
நாட்டியம் ஆடுதோ மயில்?
இவை யாவும் நிகழ்தள் அறியாது,
பசலை நோய் கொண்டு...
தலைவன் வருகையை எண்ணி,
காத்திருக்கிறாள் தலைவி...

(நன்றி : ப்ரியா இரங்கநாதன்)
3

நன்றிக் கடன்



உன்னை
முதன் முதலில்
பார்த்த இடத்தில்
தினந்தோறும் மறவாது
பூ வைக்கிறேன்
உனக்காகவும்
உன்னைக் காட்டிய
கடவுளுக்காகவும்

நிலவினும் நீ அழகு



வானத்து தேவதைகளாய்,
மேகங்கள் சூழ்ந்து,
கதிர் வீசும் மலராக,
பூத்து நிற்கும் நிலவினும்...
இமை திறந்து ஒளிரும்,
நின் கருவிழிகள் என்றும்,
அழகு தான் பெண்ணே...
0

பொறாமைக்காரன்



"அரை குறையாய்,
வரைந்த ஓவியமே...
இத்தனை அழகோ?",
என்று எண்ணியே...
படைத்தவன் உன்னை,
பாதியிலேயே விட்டுவிட்டு,
தூரிகையாய்...
என்னை படைத்துவிட்டான்,
அந்த பொறாமைக்காரன்!
0

கனவுக் கன்னி



விழிகளை மட்டும்,
கனவில் காட்டும்,
அழகிய இராட்சசியே!

ஒரு முறையேனும்,
நின் முகத்தை,
காட்டிவிட்டு போ...

கனவு என்னும்,
இரவு ஆதவன்,
முழு மதியாய்,
மனதில் மிளிரட்டும்...

அடையாளங்கள்



ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
4

தேடும் கண் பார்வை...



அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?
4

பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?
4

எத்தனை அழகு?



சன்னதியில் பெற்ற,
குங்குமத்தை கையில் ஏந்தி,
நெற்றியில் இட்டு,
கோவிலைச் சுற்றி வந்து,
கடவுளை காணும்...
செய்கை அழகு!

கோவிலைச் சுற்றி,
நடக்கும் போது...
உந்தன் பாதம் சுற்றி,
நடனமாடி சிரிக்கும்,
சரிகை வேய்ந்த,
புடவையும் அழகு!

மெளனத்தாலும்,
கண்களாலும்,
மனதாலும்,
உந்தன் புன்முறுவலாலும்,
கடவுளிடம் பேசும்...
பாவனையும் அழகு!
3

காதல் கடிதம்


உன்னோடு பேசினேன்,
உன்னோடு பழகினேன்,
என்னோடு
உன்னை வைத்து,
ஓயாமல் பார்த்தேன்...
நேற்று வரை,
எந்தன் மனதோடும்,
உந்தன் நிழற்படத்தோடும்...

உன்னோடு பேச வேண்டும்,
உன்னோடு பழக வேண்டும்,
என் அருகில் உனை வைத்து,
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்...
இன்று முதல்,
என்றென்றும் உன்னோடும்,
உந்தன் மனதோடும்...

இவ்வாறு எண்ணியே
பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே...

ஆனால்...
இந்த இன்று மட்டும்,
இதற்கு விதிவிலக்கு...
ஏனென்றால் இக்கடிதம்,
உன்னிடம் வந்துவிட்டதே...

நான் உன்னை காதலிக்கிறேன்...
4

ஆனந்தம் ஆரம்பம்



குவளை மலரில்,
நீர் வடிவது போல்,
கலங்கம் படராத,
முக வாயில் வழிந்த,
எச்சில் உமிழ் நீரை,
கண்கொள்வதும் ஆனந்தமே...

பேசுதல் அறியாத,
பேசுதலும் தெரியாத,
நான் பெற்ற பேதையை,
யான் காணும்,
சிறு கனமும், ஆனந்தமே...

பிஞ்சு விரலால்,
முகம் வருடி,
எச்சில் வழிய,
நீ எனக்கு, அளித்த
முதல் முத்தமும், ஆனந்தமே...

காய்ந்த வயிற்றில்,
நீர் கரைப்பதற்கு,
என்னவளை அழைக்க,
நீ எழுப்பும்,
அழுகுரலும் ஆனந்தமே...

எந்தன் கை பிடித்து,
தத்தித் தத்தி, அடி வைத்து,
நீ தரும் புன்னைகையும்,
ஆனந்தமே...

இவ்வாறு நீ உதிர்க்கும்...
ஒவ்வொரு செயலும்,
எனக்கு ஆனந்தமே...
4

ஊமை பொம்மைகள்



என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...


என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
0

நிழல்



என்னுடன் வரும் நிழலை,
எனதென்று நினைத்திருந்தேன்...
எனக்காக நீ அனுப்பிய,
நினைவுகள் என்று,
இன்று தான் உணர்ந்தேன்...
உந்தன் பிரிவில்
0

எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...
3

அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...
7

ஓரக் கண்ணால்...



ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...

இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...

இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?
0

இப்படிக்கு பசுமை - 4



என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை
4

முத்தம்



வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...
5

காதல் கடிதம்



உன் பார்வையால்,
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!

உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!

உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!

உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!

எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
வாடை தேடும் மலராய்,
உன் காதலி...
5

பூ முகம்



காந்தள் பூவின்,
இரு விரல்கள் பிரிந்து...
குவளைப் பூவில்,
மலர்ந்தது கண்டேன்...

மாலை கதிரவன்
மத்தியில் இருக்கும்,
காந்தள் மலராய்
நின் முகம் கண்டேன்...
தேன் ஊறா,
குவளை மலராய்,
நின் இதழ்கள் கண்டேன்...

பூவினுள் மலர்ந்த
முதற் பூவாய்
நின் முகம் கண்டேன்...

0

ஈன்றோர் வாழ்த்து



என்னை ஈன்றவள்
ஈய்ந்த உடலும்
ஈன்றவள் துணையான்
ஈய்ந்த உயிரும்
உரு கொண்டு
உள் மனதில்
நினைந்து நினைந்து
தேனாய் உருகி
பற்பல போற்றிகள்
ஈன்றோரை பாடுதாம்...
0

அனிச்சம்



தூரிகை கொண்டு தீட்டிய,
இருண்ட மேக வீதியில்,
புன்னகை பூக்கும் நிலவோ,
நின் குழல் ஏறிய,
வெண் நிறத்தில் தோய்ந்த,
நாணல் காணா அனிச்சம்?
0

என் அருகே நீ இருந்தால்...


எந்தன் அருகில்,
நீ இருந்தால்...
நான் பேசும்,
வார்த்தைகள் யாவும்,
கவிதைகளாம்...

என்னோடு,
நீ இருந்தால்...
நாம் வாழும்,
அழகிய வாழ்கை,
கவிதை புத்தகமாம்...
0

எந்தன் கண்ணில் உந்தன் அழகு...



உனக்கென்றே,
கண்ணாடிகள் பல இருந்தும்,
என் கண்களுக்குள்,
நீ விழுவதை மட்டும்,
பல காலம்
இரசித்து வந்தாய்...

பெண்ணே!
இவ்வாறு...
உன்னை நீயே
இரசித்து கொண்டால்...
நான்,
வேலையற்று போவேனே!
3

கடனாய் தருகிறேன்!


கண்களை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை நீயே பாரடி...
அழகாய் என்னை,
அழகால் கொல்லும்,
இன்பங்களை உணர்த்தும்...

இதயத்தை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
உன்னை எண்ணிப் பாரடி...
நீ நாணும் வகையில்,
உன்னுடைய வருகையை,
கவிதையாய் படிக்கும்...

என்னை கொஞ்சம்
கடனாய் தருகிறேன்!
என்னை கொஞ்சம் பாரடி...
நீ கொஞ்சி விளையாட,
நீ விரும்பும் பொம்மையாய்,
நாணி நிற்கும்...
3

நிலைகொள்ளு மனமே...



பணம் என்னும் பேயும்
ஆசை என்னும் மிருகமும்
மரியாதை என்னும் அரக்கனும்
ஆட்கொண்ட மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

பணப் பயனடைய...
அன்பையும் அரவணைப்பையும்,
தாயையும் தமிழையும்,
வீட்டையும் நாட்டையும்,
பிரியா மனதோடு,
அந்நிய நாட்டில்,
அடைகலம் புகுந்தனையே...
பகட்டு வாழ்கையை,
விரும்பிய மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நாவோடு தேன்தமிழ்
பேசும் மனிதனையும்,
அனைவரின் அன்பையும்,
இல்லாத இட்டத்தே
தேடி அலையும்
ஒரு நிலையும்...
சென்ற இடத்தில்
எடுத்த செயலை
செவ்வனே செய்ய
எண்ணும்
மறு நிலையும்...
ஏற்று தவிக்கும்
மனித மனமே...
நீ நிலைகொள்ள வேண்டாமோ?

நம் நாடு
உன்னை அழைப்பதை
கேள் தமிழா...
அன்பு அரவணைப்பும்
உன்னை அழைப்பதை
கேள் மனிதா...
தேன்தமிழ் வார்த்தைகளை
செவியோடு ருசிக்க
வா புதல்வா...
4

காலங்களில் அவள்...



புதியதோர் உலகை
உனை கொண்டு
காண கிடைத்த
அழும் குரலால்
எனை அழைக்கும்
பெண்ணே...
இவ்வுலகிற்கு
இது தான் உந்தன்
முதற் காலம்...

அழு குரல் மறந்து
முதன் முதலாய் எனை
அம்ம்ம்மமா... என்றாய்
இது தான் உந்தன்
மழலை காலம்...

தத்தி தத்தி
நடை பழகி
எழுந்து வந்து
எனை அணைத்தாய்
இது தான் உந்தன்
பிஞ்சு பருவ காலம்...

ஏதேதோ உளறியே
ஏதும் புரியாமல்
பள்ளிப் பாடங்களை
மனதினுள்
புகுத்திக் கொண்டாய்
இது தான் உந்தன்
கற்றல் காலம்...

மொட்டாய்...
மணம் வீசி
உறவுகளின் மனங்களை
கொள்ளை கொண்டு
திரிந்து மலர்ந்தாய்
இது தான் உந்தன்
பருவ காலம்...

தாய் தந்தையர்
பாசத்திற்கு இணையாக
உனை ஈர்க்கும்
அன்பிற்கு அடிபணிவாய்
இது தான் உந்தன்
நட்பு காலம்...

பெற்றவர் உற்றவர்
அனைவரையும் பிரிந்து
உந்தனுக்காக மலர்ந்தவனுடன்
கூடலும் ஊடலும் கொள்ள
தனித்து செல்வாய்
இது தான் உந்தன்
திருமண காலம்...

பிறந்த பயன்
முழுதும் பெறவே
கருவறையில்...
பிள்ளை ஏந்தி
உயிர் கொடுக்க காத்திருப்பாய்
இது தான் உந்தன்
தாய் கோலம்...

இங்ஙனம்,
உனை பெற்ற பேதை

இப்படிக்கு பசுமை - 3



பசும் பிடரியுதிர்த்த
பனையும் தென்னையும்,
தோல்கள் இழந்து
நரம்புகளாய் தோன்றும்
வேம்பும் மாமரமும்,
இளம் பச்சை ஆடையை
துறந்து அசையாது நிற்கும்
புற்களும் பயிர்களும்,
விடியலில்...
வெயில் கொடுமை தாங்காது
குடையேந்தும் மனித உயிர்களும்,
எந்தன் உயிர் தழைக்க
மழையை வேண்டி காத்திருக்கும்...

இப்படிக்கு,
பசுமை
2

இப்படிக்கு பசுமை - 2



பூக்கள் யாவும்
மலராது, பொய்த்து,
மடிந்து போகும்...

பயிர்கள் யாவும்
நாணல் காணாது,
அறுவடை சேராது,
காய்ந்து போகும்...

வற்றா நெய்தலும்,
நீர் காய்த்து...
பாலை நிலமாய்,
மாற்றமும் காணும்...

மனிதா...
இந்நிலை வாய்க்கும் காலம்
வெகு தூரம் இல்லை...
நின் துயர் கண்டு,
நான் வருந்தி
மடியும் காலமும்
தொலைவில் இல்லை...

இப்படிக்கு,
பசுமை
3

இப்படிக்கு பசுமை - 1



மரகதப் பச்சையை
மேனியில் கொண்ட
அழகிய மயிலும்
இன்று நிறமற்று
வருந்தி உலவுவதேன்?

கண்களை கொள்ளை கொள்ளும்
வயல்களும் பசுங்குழல் உதிர்த்து
வெண்மையாய் காய்த்து கிடப்பதேன்?

கறை தொட்டுத் திரிந்த
சீற்றமிகு கடல் அலைகளும்
வெகு தூரம் சென்று
கறை காணாது இருப்பதேன்?

நீரின்றி அமையா இவ்வுலகு
இன்று...
குடிநீருக்காக அலைவது ஏன்?

இவைகளுக்கு விடை கிடைத்தால்
வெகு நாட்கள் வாழ்ந்திருப்பேன்...

இப்படிக்கு,
பசுமை

மூக்குத்தி



நுதற் மையத்தில் விதையிட்டு
அழகாய் படர்ந்து தொங்கும்
மூக்கின் மேல் மலர்ந்த
அடர் செஞ்சிவப்பு நிறத்தால்
மிளிரும் மாணிக்க மூக்குத்தியை
என்றேனும் அழகு என்று
எவரேனும் சொன்னது உண்டோ...
பெண்ணே?

உனது முகப்பொழிவை
அதனுடன் ஒப்புமைபடுத்த
இயலுமோ பெண்ணே?
10

நீ தான் நான் என்றேன்...



மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!

முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!

புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!

கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!

எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!

வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...
6

நானும் கவிஞன்...



பூக்களும் சிரிக்கும் என்று
அறியாது இருந்து விட்டேன்...
நின் புன்னகை மலர்ந்ததில்
அதனை உணர்ந்து கொண்டேன்!

கருஞ்சாந்தாய் நீர்வீழ்ச்சி
இருந்ததும் அறியவில்லை...
நின் கார்குழலை
வருடும் வரை!

கால்களுக்கும் ஈர்ப்பு விசை
இருக்கும் என்று தெரியவில்லை...
நான் உன்னை நோக்கி
விரைவாக நடக்கும் வரை!

உறக்கத்தையும் சிறை பிடிப்பாய்
என்று ஒருபோதும் அறியவில்லை...
எந்தன் கனவுகளில்
நீ நிறையும் வரை!

நானும் கவிஞன் என்று
நானே நம்பவில்லை...
இந்த கவிதையை
எழுதும் வரை!!!
7

விழியீர்ப்பு விசை



உன்னை கடந்து,
போகும் போது...
நின் விழிகளை,
இமை இரண்டினுள்,
சிறிது நேரம்,
சிறையிடு பெண்ணே!

இத்தனை நாட்கள்,
நாம் நடத்தும்,
விழியீர்ப்பு போராட்டம்,
முடிவுக்கு வரட்டும்!