அடையாளங்கள்



ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
4

தேடும் கண் பார்வை...



அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?
4

பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?