புதியதோர் உலகை
உனை கொண்டு
காண கிடைத்த
அழும் குரலால்
எனை அழைக்கும்
பெண்ணே...
இவ்வுலகிற்கு
இது தான் உந்தன்
முதற் காலம்...
அழு குரல் மறந்து
முதன் முதலாய் எனை
அம்ம்ம்மமா... என்றாய்
இது தான் உந்தன்
மழலை காலம்...
தத்தி தத்தி
நடை பழகி
எழுந்து வந்து
எனை அணைத்தாய்
இது தான் உந்தன்
பிஞ்சு பருவ காலம்...
ஏதேதோ உளறியே
ஏதும் புரியாமல்
பள்ளிப் பாடங்களை
மனதினுள்
புகுத்திக் கொண்டாய்
இது தான் உந்தன்
கற்றல் காலம்...
மொட்டாய்...
மணம் வீசி
உறவுகளின் மனங்களை
கொள்ளை கொண்டு
திரிந்து மலர்ந்தாய்
இது தான் உந்தன்
பருவ காலம்...
தாய் தந்தையர்
பாசத்திற்கு இணையாக
உனை ஈர்க்கும்
அன்பிற்கு அடிபணிவாய்
இது தான் உந்தன்
நட்பு காலம்...
பெற்றவர் உற்றவர்
அனைவரையும் பிரிந்து
உந்தனுக்காக மலர்ந்தவனுடன்
கூடலும் ஊடலும் கொள்ள
தனித்து செல்வாய்
இது தான் உந்தன்
திருமண காலம்...
பிறந்த பயன்
முழுதும் பெறவே
கருவறையில்...
பிள்ளை ஏந்தி
உயிர் கொடுக்க காத்திருப்பாய்
இது தான் உந்தன்
தாய் கோலம்...
இங்ஙனம்,
உனை பெற்ற பேதை




