மீட்க முடியாத அதிசயம்



"எந்தன் நிழலில் உந்தன் உருவம்",
அழகான கவிதை என்றேன்...

"இதென்ன அதிசயம்?", என்றாய்...

"அடி பெண்ணே!
விண்ணில் உரைந்த,
மழைக் குவிலும்...
அதிசயம் இல்லை!
மண்ணில் புதையுண்டு,
மறைந்துள்ள மனமும்...
அதிசயம் இல்லை!
என்னோடு...
நீ இருக்கும்,
மீட்க முடியாத,
ஒவ்வொரு தருணமும்...",
அதிசயம் என்றேன்.
0

என்ன செய்யப் போகிறாய்?



விழிகளுக்குள் மறைத்து வைத்த,
கருங் காந்தம் கொண்டு,
எந்தன் கண்களை எப்போதும்,
இடைவிடாது ஈர்த்துக் கொண்டிருக்கிறாய்...

ஈர்க்கப்பட்ட விழிகளைக் கொண்டு,
உந்தன் கண்களைத் தவிர,
எதையும் காண இயலாது,
மந்திரமும் செய்து விட்டாய்...

இன்னும்...
என்ன செய்யப் போகிறாய்?
0

தலைவன் வருவான்...


கயற் பிம்பங் கண்டு,
சிறகு விரித்ததோ கொக்கு?
கூந்தல் வாடையால் மயங்கி
நர்த்தனம் ஆடியதோ காற்று?
படர்ந்து கிடக்கும் கார் கூந்தலை
மழை மூட்டம் என்றெண்ணி
நாட்டியம் ஆடுதோ மயில்?
இவை யாவும் நிகழ்தள் அறியாது,
பசலை நோய் கொண்டு...
தலைவன் வருகையை எண்ணி,
காத்திருக்கிறாள் தலைவி...

(நன்றி : ப்ரியா இரங்கநாதன்)
3

நன்றிக் கடன்



உன்னை
முதன் முதலில்
பார்த்த இடத்தில்
தினந்தோறும் மறவாது
பூ வைக்கிறேன்
உனக்காகவும்
உன்னைக் காட்டிய
கடவுளுக்காகவும்

நிலவினும் நீ அழகு



வானத்து தேவதைகளாய்,
மேகங்கள் சூழ்ந்து,
கதிர் வீசும் மலராக,
பூத்து நிற்கும் நிலவினும்...
இமை திறந்து ஒளிரும்,
நின் கருவிழிகள் என்றும்,
அழகு தான் பெண்ணே...
0

பொறாமைக்காரன்



"அரை குறையாய்,
வரைந்த ஓவியமே...
இத்தனை அழகோ?",
என்று எண்ணியே...
படைத்தவன் உன்னை,
பாதியிலேயே விட்டுவிட்டு,
தூரிகையாய்...
என்னை படைத்துவிட்டான்,
அந்த பொறாமைக்காரன்!
0

கனவுக் கன்னி



விழிகளை மட்டும்,
கனவில் காட்டும்,
அழகிய இராட்சசியே!

ஒரு முறையேனும்,
நின் முகத்தை,
காட்டிவிட்டு போ...

கனவு என்னும்,
இரவு ஆதவன்,
முழு மதியாய்,
மனதில் மிளிரட்டும்...

அடையாளங்கள்



ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
4

தேடும் கண் பார்வை...



அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?
4

பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?