4

விழிப்பாவை

பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...

இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே
7

பிறவிப் பயன்

எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்

ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்

இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?

அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா
5

கண்ணின் மணியாகி...

ஈன்றெடுத்து எனை வளர்த்து
கண்டடைந்த சுகம் யாவும்
என்னைப் பொருத்த மட்டில்
ஏதுமில்லை என அறிவேன்

எனையே நான் உணரும்
காலம் கடக்கும் வரை
உன்னுடனே நின் விழிதனில்
மணியெனப் பொதித்துக் கொண்டாய்
உறுத்தலெனும் வலி கண்டும்
எனக்காகப் பொருத்துக் கொண்டாய்
நீயடைந்த இடர் யாவும்
சொல்லாமல் நானறிவேன்
துயர் யாவும் களைந்திடவே
பெற்ற செல்வன் பொறுப்புணர்நதேன்
இன்று முதல் சேயாகி
கண்மணியாய் நீ இருப்பாய்
2

தாயெனும் தேவதை

சிறகுகள் சுழலும்
செயற்கைக் காற்று
பஞ்சு பொதித்த
தலையனை, மெத்தை
எதுவுமிங்கு எனக்காக
தரையமர வேண்டாமே
தாயெனும் தேவதையின்
மடியெனக்காக காத்திருக்க...
2

உறக்கம் எனும் தோழன்

பெற்றவள் மடி தன்னில்
எந்தன் தலை சாய்க்க
செழித்த கருங்குழல் காட்டினுள்
விரல்கள் உலாவி வருடலால்
விழிகளுக்குத் திரை இட்டு
சொர்க ரதத்தில் செவ்வனே
அமர்ந்து சிரித்து வரும்
உறக்கம் எனும் தோழனைத்
தழுவும் சுகம் யாரறிவரோ?
2

இருவரிக் கவிதை

இருளறையில் கருவாகி
உருளையில் பிணமாகி
இருவரிக் கவிதையானாய்
மணற் கூட்டிலுயிர்
பொதிந்த மனிதா!
2

அன்பெனும் ஒளி

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்
முருக்கித் திரித்த வெண்நாவுடைய
மண்ணெரித்து எண்ணெய் உண்ட
வெண்நா எரிக்கும் விளக்கே...
நீயறிந்த திசை எல்லாம்
வெளிச்சமெனும் புகழ் நீட்டி
ஒளி வரவைக் காட்டுகிறாய்
எந்தாயும் உனை காட்டில்,
வெளிச்சம் அதிகம் தருவாள்!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு
உன்னிடம் ஈடு உண்டோ?
2

தவத்தாய்

உமிழ்தலில் உலகங் கண்டு
நூலிறுகி முதுகுத் தண்டாய்
மாற்றம் காணுந்திங்கள் மட்டில்
பிள்ளையின் தலைதனைத் தாங்கிய
தெய்வத்தின் கரங்கள் அதனை
உடல் தகன காலத்திலும்
தீயழிக்கப எண்ண யேட்டில்
என்றென்றும் நிலைத்து இருக்கும்
நான் ஈன்றத் தவத்தாயே
3

பக்தன்

உயிர் பிரியும் மட்டில்
நிற்காது ஓட்டம் விடும்
செங்குருதி நீர் பிடித்து
நிறம் மாறா வெள்ளாடை
உடுத்திய மனக் கண்ணில்
தேக்கி வைத்த நிந்தன்
அன்பு கலந்து ஊட்டிய
வெண் நிறக் குருதியை
உண்டதனால் உயிர் வாழும்
பித்தன் இவன் என்றும்
நின் பெயரை துதியெனப்
பாடித் திரியும் பக்தன்
3

மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்