மெளனம் என்னும் தவம் களைத்து, அழகாய் ஆனந்தமாய் ஈன்றவளை நோக்கி, உரைந்த உயிரையும் உருக வைக்கும்... ஆதியில் தோன்றிய மழலை உதிர்க்கும்... "அம்மா" என்னும் உயர் வார்த்தைக்கு, கோடி கோடியாய் குவிந்திருக்கும், ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தைகளும், நிகர் செய்ய ஈடு பெறுமோ?
இதழ் விரியா மலர் போல, விரல்கள் குவிந்த இரு கைகளையும்... மெளனமும் மொழியும் அரியா, அழு குரல் அறிவிப்பையும்... எங்கும் காணா அழகை குவித்த, களங்கம் இல்லா முகத்தையும்... விரிந்த மலருக்குள், மொட்டாய் முளைத்திருக்கும், விழி இரண்டினையும்... மண்ணோடு கவி பாடாத, மலர் போன்ற பாதங்களையும்... முதல் காட்சியாய் காண, எத்தனை தவம் செய்தாய்?
ஈன்ற பிள்ளையின், முதல் குரல் கேட்டு, அரை மயக்க நிலையிலும், முகம் காண துடிப்பதும்... கண்டதும், ஒரு புறம் சாய்ந்து, நுதற் மையம் தடவி, அன்பை கொட்டி முத்தமிடுவதும்...
ஆ! பார்க்க எத்தனை அழகு? பார்ப்பவர்கள் கண்களில் தோன்றும்... ஆனந்தமும் அழகு, அழகு!
காணாது செதுக்கிய, கருவறைச் சிலையை, உயர் வலி தாங்கி, உமிழும் நிகழ்வால், ஈன்ற பிள்ளையை, பார்க்கும் முன்னமே, அதன்... அழு குரல் கேட்டு, உள்ளம் மகிழும் பெண்ணே... என்னிடம் நின்னை போற்ற, வார்த்தைகள் ஏதும் இல்லையடி!