கண்ணாடி குமிழாய், கொடுக்கப்பட்ட மனதை, ஆயிரம் துண்டுகளாய், உடைத்த பின்பு... நீ நடக்கும் பாதையில், உன்னை வருத்தாது, ஒவ்வொரு துண்டும், உதிர்ந்த மலராய், மாறுவதும் ஏனோ?
என்னை பார்க்கவே வந்துவிடும், உன்னுடைய வாரக் கடிதத்தையும்... என்னுடைய நலமறிய அனுப்பப்படும், உன்னுடைய அலைபேசி குரலையும்... எதிர்பார்த்து காத்திருந்த, ஒவ்வொரு அழகான நொடியும்... கல்லூரி விடுதியின் அறையில், காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது... அன்பின் நினைவலைகளாய்!
கல்லூரி விடுதியில், என்னுடைய அறையில், நெடுநாட்களாக... என்னை சுமந்த நாற்காலிகளும், சாய்ந்து நின்ற கதவுகளும், எந்தன் உறக்கம் காணாத தலையணையும், ஆயிரம் ஆயிரம் கதைகளாய்... உந்தன் பிரிவின் வலியையும், உந்தன் அன்பின் இழப்பையும், கவிதையாய் சொல்லும்!
கல்லூரி விடுதியின், தாழிட்ட அறையில்... பாலையில் எறியும், மனித உயிரின், பெருத்த வலியோடு, ஒவ்வொரு நாளும், விடைபெறும் என்று... உன்னை பிரியும், அன்றைய பொழுதில், நான் அறிந்திருக்கவில்லை!