கவிக்குடில் குமரன்

~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~

தண்டனை...



முத்தத்தின் சத்தம்
உலகில் ஓய்திடினும்
எந்தன் மனதோடு
ஓயவில்லை...

அதன் ஈரம்
உதட்டோடு காய்ந்திடினும்
எந்தன் மனதோடு
காயவில்லை...

உணர்வுகளால் ஈர்த்து
உரைந்த இரத்தமும்
இதுவரை
தழலுற்று மீளவில்லை...

அந்த மெளனத்தில்
பார்வைக் கீற்றுகளாய்
ஒலித்த வார்த்தைகளும்
மறையவில்லை...

ஒற்றை முத்தத்தில்
அளித்த தண்டனையே
போதுமடி பெண்ணே
நாம் இருவரும்
சேரும் வரை...

அமிழ்து!



பல நாட்கள்
வற்றிய சோற்றை
உண்டே களைத்துவிட்டேன்...

வெண் தயிர் கொண்டு,
பழைய சோறு குழைத்து,
ஊறுகாய் தொட்டு தரும்,
பிடி சோறு போதுமே....
அமிழ்து உண்டு களித்ததாய்
எந்தன் நினைவினில் தோன்றுமே...

தாயே!
நான் அமிழ்துண்ண வருகிறேன்...

அன்பை என்வென்று சொல்ல?



மலர்ந்த முல்லை,
புற்களின் பனித்துளி,
தெரிக்கும் மழைத்துளி,
யாழின் இசை,
பைந்தளிர் கொடி,
காற்றின் கீதம்,
சங்கின் நாதம்,
நிலவின் ஒலி,
தெளிந்த நீர்,
அரிய அமுதம்,
பிள்ளையின் பார்வை,
மழலைச் சிரிப்பு
இவை யாவையும்
தூயதாய் கண்டால்
எந்தன் தாயே
நின் அன்பை
என்வென்று சொல்ல?

பதிவுகள்



கடற்கரை மணலிலும்,
காய்ந்த மரத்திலும்,
தேர்வு காகிதத்திலும்,
பச்சை இலைகளிலும்,
ஓடும் நீரிலும்,
வெந்நிற சுவற்றிலும்,
உலவும் காற்றிலும்,
உந்தன் மனதிலும்,
சின்னஞ்சிறு ஓவியங்களாய்...
நீ பதித்த
எனது பெயர்கள்...

மனதிற்குள் மெதுவாக



பெண்ணே! போதும்... போதும்...
இதற்கு மேலும் சிந்தாதே...

வாடையற்ற நின் புன்னகைகளை,
தினம் தினம் சேமித்தே,
எந்தன் ஆயுள் கழிந்துவிடும்...
மிளிர்தலில் கண்களும் மங்கிவிடும்...

வேண்டுமென்றால், இப்படிச் செய்,
உந்தன் மனதிற்குள் மெதுவாக,
வெகு நேரம் சிரித்துக்கொள்,
அங்கு வந்து கேட்டுக்கொள்கிறேன்!

தேடல்

Loading...

கவிதைகள்

நண்பர்கள்