
எத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து,
அதில் ஒன்றை தேர்வு செய்து,
அதனை அழகாய் சூட வைத்து,
எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்!
தத்தித் தவழ்ந்து திரியும் போது,
என்னை அறியாமல் கதவில் முட்டினால்,
பிழை செய்ததாய் கதவை அடித்துவிட்டு,
எனக்கு சமாதானங்கள் பல சொல்லி,
கண்ணீர் துடைத்து அழுகையை நிறுத்துவாய்!
கைகளின் தொட்டிலில் என்னை ஏந்தி,
நெற்றி மீது நெற்றி வைத்து,
மூக்கின் மீது மூக்கு முட்டி,
கண்களால் முத்தமிட்டு அழகாய் கொஞ்சுவாய்!
இத்தனையையும் செய்துவிட்டு,
ஏதும் செய்யாததாய் சொல்லும்,
உன்னுடைய அன்பிற்கு,
நிகர் ஏதும் உண்டோ?